Published : 28 Oct 2015 06:58 PM
Last Updated : 28 Oct 2015 06:58 PM

கேரள இல்லத்தில் 45 நிமிடங்களில் விற்று தீர்ந்த மாட்டிறைச்சி

டெல்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தின் கேன்டீனில் மாட்டிறைச்சி உணவு வகைகள் வெறும் 45 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

கேரள பவனில் உள்ள உணவகத்தில் பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு அம்மாநில போலீஸார் அதிரடி சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், கேரள பவன் மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கு கூடிய கேரள எம்.பி.க்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, கேரள பவனில் இன்று புதன்கிழமை மீண்டும் மாட்டிறைச்சி விற்பனை தொடங்கியது. கேரள இல்ல அதிகாரி கே.ஜி. ஜோசப் இதனை தெரிவித்தார்.

இந்த நிலையில், எருமை மாட்டிறைச்சி உணவு வகைகள் வெறும் 45 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்தன. மீட் ஃப்ரை மற்றும் மீட் கறி என்று அடைப்புக்குறிக்குள் எருமை என்று எழுதப்பட்ட மெனு போர்டில் 'சோல்ட் அவுட்' என்றும் எழுதப்பட்டது.

மாட்டிறைச்சி உடனடியாக விற்றுத் தீர்ந்ததால் பலரும் ஏமாற்றம் அடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து அந்த உணவு வகைகள் கூடுதலாக சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் மாட்டிறைச்சி விற்கப்படுவதாக புகார் அளித்த இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா கைது செய்யப்பட்டார். இவரது புகாரின் அடிப்படையில்தான் திங்களன்று கேரளா இல்லத்தில் நுழைந்து போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட விஷ்ணு குப்தா மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x