Published : 12 Jan 2017 10:10 AM
Last Updated : 12 Jan 2017 10:10 AM
முற்றிலும் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத திருமண விழா ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டம், சக்ரதார்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணுக்கும், கிழக்கு சிங்பும் மாவட்டம் பாடியா கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் நாயக் என்ற இளைஞருக்கும் நேற்று முன்தினம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இத்திருமணத்தை ரொக்கப் பயன்பாடு இல்லா திருமணமாக நடத்தி முடிக்க, ஜாம்ஷெட்பூர் துணை ஆட்சியர் சஞ்சய் குமார், இரு வீட்டாரிடமும் பேசி சம் மதிக்க வைத்தார். இதையடுத்து திருமணத்துக்கு தேவையான ஆடைகள், நகைகள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் என அனைத் தும் ரொக்கமில்லா பணப் பரிவர்த் தனை மூலமே வாங்கப்பட்டன.
மணமகன் ஊரில் உள்ள கோயி லில் நேற்று முன்தினம் காலை திருமண ஏற்பாடுகள் செய்யப் பட்டன. முன்னதாக முதல்நாள் இரவு, மணமகன் வீட்டில் கழிப்பறை கட்டும் பணி தொடங்கியது. இப்பணியில் மணமகள் வீட்டாரும் தாமாக முன்வந்து பங்கேற்றனர். இப்பணி முடிந்த அடுத்த சில மணி நேரத்தில் திருமண விழா விமரிசையாக நடந்தது.
திருமணம் முடிந்த உடனேயே புதுத் தம்பதியின் பெயரில் கூட்டாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, ஏடிஎம் அட்டை வழங்கப்பட்டது. புரோகிதருக்கான தட்சணை முதல் மணமக்களுக்கான அன்பளிப்பு வரை அனைத்தும் ஆன்லைன் அல்லது காசோலை மூலமாகவே வழங்கப்பட்டது.
இத்திருமணம் குறித்து துணை ஆட்சியர் சஞ்சய் குமார் கூறும்போது, “பண மதிப்பு நீக்கத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரொக்கப் பயன்பாடு இல்லாமல் நடந்த திருமணம் இதுவாகத்தான் இருக்கும். இந்தத் திருமணத்தை காண ஒட்டுமொத்த கிராமமும் திரண்டிருந்தது. நாடு முழுவதும் ரொக்கப் பயன்பாடு இல்லாத சமூகத்தை உருவாக்கும் இயக்கத்தில் தாங்களும் பங்கேற்றதில் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்” என்றார்.
இத்திருமணத்தில் பாஜக எம்எல்ஏ லட்சுமண் துடு, டிஎஸ்பி அஜீத் குமார், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜமுனா துடு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவரும் காசோலை மூலமாகவே மணமக்களுக்கு அன்பளிப்பு வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT