கணவர் காணாமல் போனவர்கள் மறுமணம் செய்து கொள்ளலாம் - காஷ்மீர் முஸ்லிம் உலமாக்கள் அறிவிப்பு

கணவர் காணாமல் போனவர்கள்  மறுமணம் செய்து கொள்ளலாம் - காஷ்மீர் முஸ்லிம் உலமாக்கள் அறிவிப்பு
Updated on
1 min read

காஷ்மீரில் கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான ஆண்கள் காணாமல் போயிருக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனவர் பற்றிய விவரம் கிடைக்காவிட்டால் அவரது மனைவி மறுமணம் செய்து கொள்ளலாம் என முஸ்லிம் அறிஞர்கள் குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மனித உரிமை அமைப்பினர் வரவேற்றுள்ளனர். இதனால் 1,500க்கும் மேற்பட்ட ‘பாதி-கைம்பெண்கள்’ என அழைக்கப்படும் கணவர் காணாமல் போன முஸ்லிம் பெண்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

காஷ்மீரில் கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான ஆண்கள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்கள் குறித்த தெளிவான தகவல் கிடைக்காததால், ஏராளமான பெண்கள் மரபுவழி உரிமை மற்றும் மறுமணம் குறித்த பிரச்சினைகளுக்கு ஆளாகினர். இது தொடர்பாக இஷாஸ் எனப்படும் சமூக உரிமை அமைப்பு சார்பில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த அறிஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது. வியாழக் கிழமை நடைபெற்ற இவ்விவாதத் தின் முடிவில் பெண்கள் மறுமணம் செய்ய அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

அஞ்சுமன் இ நஸ்ரத்துல் இஸ்லாம் அமைப்பின் முகமது சயீத் உர் ரஹ்மான் ஷாமாஸ் கூறுகையில், “கணவர்கள் காணாமல் போய் நான்கு ஆண்டுகளாக அவர் பற்றிய தகவல் கிடைக்காவிட்டால் அந்தப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ளலாம் இது தொடர்பான மிக விளக்கமான பத்வா விரைவில் அறிவிக்கப்படும். இது சார்ந்த சொத்துப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய சட்டப்படி தீர்வு காணப்படும்” என்றார்.

கணவர் காணாமல் போய் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாத நிலையில் அப்பெண்கள் “பாதி கைம்பெண்கள்” என அழைக்கப்படுவர். ஜம்மு-காஷ்மீர் சமூகச் சங்க கூட்டமைப்பும், காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கமும் இம்முடிவை வரவேற்றுள்ளன.

ஆய்வுக் குழு

பாதி கைம்பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, உரியவர்களுக்குக் கிடைக்கிறதா, அத் தொகை அவர்களால் மட்டுமே கையாளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in