Published : 16 Feb 2014 02:00 PM
Last Updated : 16 Feb 2014 02:00 PM

அரசியலில் மூன்றாவது அணிக்கு இடம் உள்ளது: ஏ.பி.பரதன் நம்பிக்கை

அரசியலில் மூன்றாவது அணிக்கு இடம் உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் போபாலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மக்களவைத் தேர்தலில் இக்கூட்டணி பெரும்பான்மை பலத்தைப் பெற்றால், இதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முதல்வர்களுக்குள் ஒருவர் பிரதமராக வாய்ப்பு உள்ளது.

பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி கூட, குஜராத் முதல்வராகத்தான் உள்ளார்.

காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் எதிராக அரசியல் நடத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி, மூன்றாவது கூட்டணியில் இணைய விரும்பினால் தாராளமாக வரலாம். அது தொடர்பாக அக்கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் பிரதமர் வேட்பாளர் என்பதே கிடையாது. 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கை யாரும் மறக்க முடியாது. சில விசாரணை அமைப்புகள் அவர் மீது தவறில்லை என்று கூறிவிட்டதாலேயே, அவர் மீது குற்றம் இல்லை என்றாகிவிடாது.

மோடி காரணமாகத்தான் பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியே வந்தது.

இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராக செயல்படுபவர்களை அமெரிக்கா எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது. அந்த வகையில்தான், மோடி தொடர்பாக இப்போது மென்மையான போக்கை அந்நாடு கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது” என்றார் ஏ.பி.பரதன். - பி.டி.ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x