Published : 14 Dec 2013 02:16 PM
Last Updated : 14 Dec 2013 02:16 PM

கூட்டணி அமைக்க கெஜ்ரிவால் விதித்த 18 நிபந்தனைகள்

டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தர தயார் என அறிவித்துள்ள நிலையில், கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 18 நிபந்தனைகள் விதித்துள்ளார்.

இன்று காலை டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவு எடுக்க 10 நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.

தவிர ஆம் ஆத்மிக்கு ஆதரவு தர தயார் எனக் கூறியுள்ள காங்கிரஸுக்கும், எதிர்கட்சியாகவே இருக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ள பாஜக-வுக்கும் தனித் தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அந்தக் கடிதத்தில் அவர் 18 நிபந்தனைகளை விதித்திருக்கிறார். அவை:

1.டெல்லியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் சிவப்பு சுழல் விளக்கு கார்களை பயன்படுத்தக் கூடாது, பகட்டான பங்களாக்களிலும் வாழக் கூடாது.

2.அண்ணா ஹசாரே வலியுறுத்துல் வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.

3.டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

4. டெல்லியில் மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனங்கள் தனிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.

5. மின் மீட்டர்கள் சோதனை செய்யப்பட வேண்டும்.

6. டெல்லியில் ஒவ்வொரு நபருக்கும் நாள் ஒன்றுக்கு 220 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். ஆனால் அந்த தண்ணீர் எங்கே?

7. டெல்லியில் உள்ள காலனி குடியிருப்புகள் சட்டப்பூர்வமாக்கப் படுவதோடு அவை முற்றிலுமாக சீரமைக்கப்பட வேண்டும்.

8. குடிசைகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்.

9. ஒப்பந்த அடிப்படையில் பணி செய்பவர்களுக்கு நிரந்தர வருமானம் தரும் வேலை உத்தரவாதம் அளித்திட வேண்டும்.

10. சாமான்ய வியாபாரிக்கு கூட அடிப்படை கட்டமைப்பு, சாலை, தண்ணீர், மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

11. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடாது.

12. கிராமப்புற விவசாயிகளுக்கு வசதிகளும், மான்யங்களும் தர வேண்டும்.

13. டெல்லியில் 500 அரசு பள்ளிகள் திறப்பது, தனியார் கல்வி நிறுவனங்களில் நண்கொடை வசூலிப்பதை தடுப்பது. இவற்றின் மீது காங், பாஜக தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

14. மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மருத்துவமனைகள் திறக்க வேண்டும்.

15. மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் 3 மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும்.

16.அனைது வழக்கு விசாரணைகளும் 6 மாத காலத்துக்குள் முடித்து நீதி வழங்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். கூடுதலாக நீதிபதிகளையும் நியமிக்க வேண்டும்.

17. டெல்லி முனிசிபல் அமைப்பு தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமா என்பது தெரிய வேண்டும்.

18. சில பிரச்சினைகளில் பொதுமக்களே கூடி முடிவெடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.

இப்படி காங்கிரஸ், பாஜக-வுக்கு கூட்டணி அமைக்க சில நிபந்தனைகள் விதித்துள்ளார்.

காங்கிரஸ், பாஜக கருத்து:

இந்நிலையில், ஆம் ஆத்மி கடிதம் குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கெஜ்ரிவால் கடிதத்தை என் பார்வைக்கு அனுப்பியுள்ளார். அக் கடிதத்தை முழுமையாக ஆராய்ந்து, இன்னும் ஓரிரு தினங்களில் பதில் கடிதம் அனுப்புவோம் என்றார்.

டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கான வழிகளை ஆராய்வதை விடுத்து பிற கட்சிகளை ஆம் ஆத்மி விமர்சிப்பது உச்சபட்ச கர்வம் என பாஜக சாடியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x