Published : 24 Nov 2013 01:12 PM
Last Updated : 24 Nov 2013 01:12 PM

ஐஸ் க்ரீம் பார்லர் பலாத்கார வழக்கு: குஞ்ஞாலிகுட்டிக்கு எதிராக அச்சுதானந்தன் போர்க்கொடி

கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற படகுப் போட்டி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கேரள ஊடகங்களில் சில வாரங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்தார் நடிகை சுவேதா மேனன். இது தொடர்பாக கொல்லம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இதையடுத்து, பீதாம்பர குருப் மன்னிப்பு கேட்டதாக சொல்லி சுவேதா மேனன் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இந்த களேபரங்கள் அடங்குவதற்குள் அடுத்த பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது குஞ்ஞாலிகுட்டி விவகாரம்.

கேரளாவில் தொழில் துறை அமைச்சராக இருப்பவர் முஸ்லிம் லீக் கட்சியின் குஞ்ஞாலிகுட்டி. இவர் மீது சி.பி.ஜ. விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் போட்ட மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் இதுகுறித்து மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கோழிக்கோட்டில் ஐஸ் க்ரீம் பார்லர் ஒன்றை ரெஜினா என்ற பெண் நடத்தி வந்தார். இந்த ஐஸ் க்ரீம் பார்லருக்கு வரும் இளம் பெண்களுக்கு ஐஸ் க்ரீமில் போதைப் பொருள்களைக் கலந்து கொடுத்து தவறான தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்தது.

இவரது வலையில் பல அப்பாவிப் பெண்கள் விழுவது குறித்து அதே பகுதியில் அனுஷி என்ற பெண்கள் அமைப்பை நடத்தி வரும் அனிதாவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவரது நடவடிக்கையைத் தொடர்ந்து தான் இவ்விவகாரம் கடந்த 2006-ம் ஆண்டு முதன் முதலில் வெளியே வந்தது.

அப்போது கைது செய்யப்பட்ட ஐஸ் க்ரீம் பார்லர் உரிமையாளர் ரெஜினா, "இந்த ஐஸ் க்ரீம் பார்லரில் இருந்து தொழில் துறை அமைச்சர் குஞ்ஞாலிகுட்டிக்கும் பல பெண்களை அனுப்பி வைத்ததாக வாக்குமூலம் கொடுத்தார். இவ்விவகாரம் சூடு பிடித்ததைத் தொடர்ந்து குஞ்ஞாலிகுட்டி அப்போதே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே ரெஜினா, பிறழ் சாட்சி அளித்ததைத் தொடர்ந்து, கடந்த 2006-ம் ஆண்டு இவ்வழக்கில் இருந்து குஞ்ஞாலிகுட்டி விடுவிக்கப்பட்டார்.

இப்போது கேரளத்தில் முஸ்லிம் லீக் ஆதரவுடன் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியில் தொழில் துறை அமைச்சராக இருக்கிறார் குஞ்ஞாலிகுட்டி. இந்நிலையில் குஞ்ஞாலிகுட்டியின் உறவினர் ரஹீப், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனிடம் ஒரு புகார் ஒன்றை வாசித்தார்.

அதன் சாராம்சம் இது தான்.. ’’குஞ்ஞாலிகுட்டி அமைச்சராக இருந்த போது, அந்த ஐஸ் க்ரீம் பார்லரில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது உண்மை தான். வழக்கில் இருந்து குஞ்ஞாலி குட்டியை விடுவிக்க பல முறைகேடு களை செய்தோம்" என்று ஆதாரங்களை வைத்துள்ளார்.

அந்த ஆதாரங்களை அடிப்படை யாகக் கொண்டு உச்ச நீதிமன்றத் தில் சி.பி.ஜ. விசாரணை கேட்டு அச்சுதானந்தன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுகுறித்து மாநில அரசுக்கும், சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து, அச்சுதா னந்தனிடம் ’தி இந்து’ நாளேட் டிற்காக பேசினோம். “குஞ்ஞாலி குட்டி அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்விவகாரத்தில் அவர் சார்ந்த முஸ்லிம் லீக் கட்சியுடன் சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை." என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x