Published : 23 Apr 2017 11:41 AM
Last Updated : 23 Apr 2017 11:41 AM
காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட பர்கா சுக்லா சிங் நேற்று பாஜக.வில் இணைந்தார்.
டெல்லி காங்கிரஸ் மகளிர் பிரிவுத் தலைவராக இருந்தவர் பர்கா சுக்லா சிங். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் ஆகியோரை கடுமையாக விமர்சித்து கருத்துகள் தெரிவித்தார். இதையடுத்து நேற்றுமுன்தினம் கட்சியில் இருந்து பர்கா சிங் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
இந்நிலையில், டெல்லியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் பர்கா சிங் இணைந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பர்கா சிங்
தேர்தலில் போட்டியிடவோ அல்லது பதவிக்காகவோ நான் பாஜக.வில் சேரவில்லை. எனக்கு கட்சி மேலிடம் என்ன பணி கொடுக்கிறதோ அதை செய்வேன். கடந்த 3 ஆண்டுகளாக நாட்டில் பல்வேறு சிறந்த மாற்றங்களை பிரதமர் மோடி செய்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன்.
அதில், முத்தலாக் விவகாரத் தால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். அந்தக் கடிதத்துக்குப் பிரதமர் மோடி அனுப்பியிருந்த பதில் எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது.
இவ்வாறு பர்கா சிங் கூறினார்.
டெல்லியில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலை யில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு பின்ன டைவு ஏற்பட்டுள்ளது என்று டெல்லி பாஜக.வினர் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT