Published : 26 Apr 2017 01:42 PM
Last Updated : 26 Apr 2017 01:42 PM
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து 15 நாட்கள் நீக்கப்பட்டுள்ளன. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து 15 நாட்கள் நீக்கப்படுவது என முடிவெடுக்கப்பட்டது. இதுவரை அம்மாநில அரசு விடுமுறைப் பட்டியலில் 42 நாட்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 17 விடுமுறை நாட்கள் தலைவர்களின் பிறந்தநாள், இறந்தநாளுக்காக அறிவிக்கப்பட்டவை. இந்த 17 நாட்களில் இருந்து 15 நாட்களை நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா, "அமைச்சரவை கூட்டத்தில் பெருந்தலைவர்கள் பிறந்தநாள் போன்றவற்றிற்காக அறிவிக்கப்பட விடுமுறை நாட்களில் 15 நாட்கள் நீக்கப்பட்டுள்ளன. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயக்கப்படும். எந்த தலைவருக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டதோ அவர் தொடர்பாக பாடம் புகட்டப்படும்" என்றார்.
முன்னதாக அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் விழாவின்போது பேசிய யோகி ஆதித்யநாத், பெருந்தலைவர்களை நினைவுகூர விடுமுறை அளிக்கப்படுவதற்கு பதில் அன்றைய தினம் வகுப்புகளில் சம்பந்தப்பட்ட தலைவர்கள் குறித்து பாடம் எடுக்கலாம்.
இதனால் அரசு ஆணைக்கு ஏற்ப 220 நாட்கள் பள்ளி, கல்லூரிகளை நடத்தலாம். தற்போது 120 நாட்கள் மட்டுமே கல்விநிலையங்கள் இயங்குகின்றன. இதேநிலை தொடர்ந்தால் தலைவர்கள் பெயரில் அனைத்து நாட்களும் விடுமுறை நாட்களாகும்" என்று அவர் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT