இந்திய - வங்கதேச எல்லையில் ரூ.2 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்: ஒரிஜினல் போல இருந்ததால் அதிர்ச்சி

இந்திய - வங்கதேச எல்லையில் ரூ.2 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்: ஒரிஜினல் போல இருந்ததால் அதிர்ச்சி
Updated on
1 min read

மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கலியாசக் பிளாக், சுரியந்த்பூர் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகளை எல்லை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இந்தப் பகுதி இந்தியா வங்கதேச எல்லையில் உள்ளது.

இந்திய வங்கதேச எல்லையில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வங்க தேச எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் மர்ம நபர்கள் தூக்கி வீசியுள்ளனர். அந்த நேரத்தில் இந்திய பகுதிக்குள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் அந்த நோட்டுகளைப் கைப்பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து எல்லைப் பாது காப்புப் படை அதிகாரிகள் கூறிய தாவது: போலி இந்திய ரூபாய் நோட்டுகளை கடத்தியது தொடர்பான வழக்கில், உமர் பரூக் (21) என்ற இந்திய இளைஞரை தேசிய புலனாய்வுக் கழகத்தினர் (என்ஐஏ) தேடி வந்தனர். உமருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இந்திய போலி ரூபாய் நோட்டுகளை கடத்தும் இன்னொருவருக்கு ரூ.2000 போலி நோட்டின் சேம்பிளை காட்டுவதற்கு எடுத்துச் சென்றபோது உமர் பரூக்கை மால்டா மாவட்டத்தின் கோபால்கஞ்ச் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய போதுதான், வங்கதேசத்தில் இருந்து ஏராளமான போலி நோட்டு கள் இந்தியாவுக்குள் கடத்தப்படும் தகவல் கிடைத்தது. இந்நிலையில் எல்லையில் நேற்று ரூ.2 லட்சம் மதிப்புள்ள போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த நோட்டுகளை ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில், புதிய 2000 ரூபாய் நோட்டில் 17 பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்பு பிடிபட்ட போலி 2000 நோட்டில் அந்த பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறவில்லை. எனவே, அவற்றை எளிதில் போலி என்று அடையாளம் காணும் அளவுக்கு இருந்தது. ஆனால், உமர் பரூக் மற்றும் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட போலி நோட்டுகளில், ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டில் உள்ள 17 பாதுகாப்பு அம்சங்களில் 8 அம்சங்கள் பொருந்தி உள்ளன. தற்போது பிடிபட்டுள்ள ரூபாய் நோட்டுகளின் தரம் இதற்கு முன்பு பிடிபட்டதை விட மேம்பட்டுள்ளதை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in