

ஆந்திர மாநிலத்தில் நேற்று ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள், 9 சிறுவர்கள் உட்பட 14 பேர் பலியாயினர். மேலும் காணாமல் போன 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், குந்தக்கல் மண்டலம், வைட்டிசெருவு ஏரியில் நேற்று மாலையில் 19 பேர் படகில் பயணம் செய்தனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பெண்கள், 9 சிறுவர்கள் உட்பட 14 பேர் பலியாயினர். ஒருவர் நீச்சல் அடித்துக்கொண்டு உயிர் தப்பி உள்ளார்.
அரசு நிவாரணம்
மேலும் காணாமல் போன 4 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக குந்தக்கல் போலீஸார் தெரிவித்தனர். இறந்தவர்களில் பெரியவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், சிறுவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.