

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பம் படித்து வந்த நஜீப் அகமது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி காணாமல் போனார். இது தொடர்பான வழக்கை டெல்லி போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், நஜீப் காணாமல் போன அன்று தங்கி இருந்ததாகக் கூறப்படும் ஓட்டலுக்கு சென்று பார்வையிட்டனர். இதையடுத்து, அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 011-2436 8641, 2436 8638 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என சிபிஐ அறிவித்துள்ளது. தகவல் தருவோருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், நஜீப் அகமது உள்ளிட்ட சிலரைத் தாக்கியதாகவும், அதனைத்தொடர்ந்தே நஜீப் மாயமானதாகவும், இடதுசாரி தொடர்புடைய அகில இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.