

தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கும் கெயில் இந்தியா நிறுவனத்தின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் 4 வார காலம் தடை விதித்துள்ளது.
விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் கொண்டு செல்வதை அனுமதிக்கும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் கொண்ட அமர்வு
முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கெயில் நிறுவனம் சார்பில், “குழாய் பதிப்பு வேலை மிகவும் அவசரம், இப்போது விட்டால் உரிய காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. நெடுஞ்சாலை வழியே குழாய் பதிப்பது இயலாத காரியம். தனியார் நிலத்தில் குழாய் பதிப்பதால் விவசாயத்துக்கோ, விவசாயிகளுக்கோ எந்த இடையூறும் இல்லை. எனவே தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாது. குழாய்கள் பதிக்க அனுமதிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், “எதற்காக இத்திட்டத்துக்கு விவசாயிகளின் வீடுகளும், நிலங்களும் தான் வேண்டும் என்று கேட்கிறீர்கள்? இது முறையற்ற செயல். நெடுஞ்சாலைகளில் குழாய்களை பதிக்க முடியாது என்பதை அறைகளில் இருந்துகொண்டு முடிவு செய்யாதீர்கள். குறிப்பிட்ட பகுதியில் சென்று ஆய்வு நடத்துங்கள். தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் எவ்வளவு நிலம் வேண்டும் என்பதை கூறுங்கள்” என்று கூறினர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை இத்திட்டத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டனர்.
கேரள மாநிலத்தின் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலத்தின் மங்களூருக்கு தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறுவனமான கெயில் இந்தியா ரூ.3,400 கோடி செலவில் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை வழியே செயல்படுத்துமாறும், விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்துவதற்கு தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கெயில் தொடர்ந்த வழக்கில், திட்டத்துக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.