

காஷ்மீரின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தை நோக்கி பேரணி நடத்த பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் தவிர இதர பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நேற்று முன்தினம் தளர்த்தப்பட்டிருந்தது. ஆனால், புதிய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
வன்முறையின் போது நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி 61 வயது முதியவர் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக அனந்த்நாக் நகரத்திலும் குல்காம் மாவட்டம் முழுமையும் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. தவிர ஸ்ரீநகரின் கன்யார், ரெய்னாவரி, மகராஜ் கஞ்ச், சபா கடல், நவாட்டா ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட் டுள்ளது. 4 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடி நிற்க மாய்சுமா, கிரால்குட் காவல் நிலைய எல்லைப் பகுதி உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்துப் பகுதிகளிலும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன” என காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முடக்கப்பட்டிருந்த செல்போன் சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. எனினும், இயல்பு வாழ்க்கை 19-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறியதற்காக ஹுரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சயீத் அலி ஷா கிலானி நேற்று கைது செய்யப்பட்டார். “குல்காம் மாவட்டத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றதற் காக சயீத் அலி ஷா கிலானி கைது செய்யப்பட்டார். அவர் ஹும்ஹமா காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு காரணமாக ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சுமார் 300 கி.மீ. நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே சாலையாக உள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக ராம்பன் மாவட்டத்தில் காங்ரூ, பாந்தல், செரி, கரூல் ஆகிய இடங்களில் இந்த நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளன. இதையடுத்து இயந்திரங்களின் துணையுடன் சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர். இதனிடையே காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் இன்றும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.