வலுவான லோக்பால்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

வலுவான லோக்பால்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம்
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி மகாராஷ்டிரத்தின் ராலேகான் சித்தி கிராமத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே.

முன்னதாக, இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் அளித்த பேட்டி: லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதாக கூறி இரண்டு ஆண்டுகளான பின்பும் பயன் இல்லை. மத்திய அரசு எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இதைக் குறிப்பிட்டு நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 10-ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறேன்..

‘ஜந்தந்தர மோர்ச்சா’ என்ற புதிய அமைப்பு உண்ணாவிரதத்தை நடத்தும். இந்த அமைப்பு அரசியல் சார்பற்றது, எதிர்காலத்தில் அரசியல் கட்சியை உருவாக்காது. எந்தவொரு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிக்காது என்றார்.

லோக்பால் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட 6 மாநிலங்களுக்கு சென்று வந்துள்ள 75 வயதான ஹசாரே, இந்த முறை தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார்.

கடந்த 2011 ஆகஸ்டில் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகியது. மத்திய அரசு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தது. இதையடுத்து 16 நாள்களாக இருந்த உண்ணாவிரதத்தை ஹசாரே முடித்துக் கொண்டார். அதன்பின் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை.

இந்த மசோதா கடந்த ஆண்டு மே மாதம் முதல் நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்காகக் காத்திருக்கிறது. இதை உடனடியாக குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஹசாரே மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்க உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in