Published : 24 Jan 2017 06:43 PM
Last Updated : 24 Jan 2017 06:43 PM
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கு புதிய திட்டங்கள் எதையும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் எழுதி உள்ள கடிதத்தில், 'மத்திய அரசு திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம்.
அதேநேரத்தில், அனைத்து தரப்பினருக்கும் சமமான தளத்தை பராமரிக்கும் வகையில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது. அவ்வாறு அறிவித்தால் அது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையை மாற்றி, இந்த ஆண்டு முதல் ஒரு மாதம் முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் பிப்ரவரி 4 முதல் மார்ச் 8-ம் தேதி வரை பல கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பட்ஜெட் தாக்கலை தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என கருதினால், அதுகுறித்து தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT