Published : 28 Jan 2014 08:00 AM
Last Updated : 28 Jan 2014 08:00 AM

அந்தமான் படகு விபத்து உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

அந்தமானில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட படகு விபத்து தொடர்பாக படகின் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தமானின் ராஸ் தீவில் இருந்து வடக்கு விரிகுடாவுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அகுவா மரைன் என்ற தனியார் சொகுசு படகு புறப்பட்டுச் சென்றது. அந்தப் படகில் 25 பேரை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும். ஆனால் 50க்கும் மேற்பட்டோர் படகில் ஏற்றப்பட்டனர். படகு கடலில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மூழ்கியது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். 29 பேர் மீட்கப்பட்டனர். ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

உயிரிழந்தவர்களில் 16 பேர் தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 3 பேர், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.

மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

இந்த விபத்து குறித்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

படகில் பயணம் செய்தவர் களுக்கு உயிர் காக்கும் ‘லைப் ஜாக்கெட்டுகள்’ வழங்கப்பட வில்லை என்று தெரிகிறது. கடலில் மூழ்குவோரை காப் பாற்றும் நீச்சல் வீரர்களும் படகில் இல்லை. பாதுகாப்பு அலுவலர் களும் இல்லை. இந்த விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

படகில் வெடிசத்தம்

விபத்து நேரிட்டபோது சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியபோது, பெரிய வெடி சத்தம் கேட்டது.அதன் பின்னரே படகு கடலில் மூழ்கியது. இந்த வெடிசத்தம் கேட்டே அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டனர் என்று தெரிவித்தனர்.

போலீஸ் மறுப்பு

விபத்து நடைபெற்று ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே அந்தமான் போலீஸ் படையும் கடலோர காவல் படையும் சம்பவ இடத்துக்கு வந்ததாக உயிர் தப்பியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை அந்தமான் போலீஸார் மறுத்துள் ளனர். தகவல் அறிந்தவுடன் போலீஸ் சார்பில் மீட்புப் படை அனுப்பப்பட்டது. கடலோர காவல் படையுடன் இணைந்து அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

படகு உரிமையாளர் கைது

இதனிடையே விபத்து தொடர்பாக அகுவா மரைன் படகின் உரிமையாளர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து நீதி விசாரணைக்கு அந்தமான் துணைநிலை ஆளுநர் லெப்டினென்ட் ஜெனரல் ஏ.கே.சிங் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கூடுதல் மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.-பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x