

கர்நாடக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட்டு 14 அமைச்சர்களின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் 2018-ல் நடக்க வுள்ள சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு, ஊழல் புகார் மற்றும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய 14 அமைச்சர்கள் நீக்கப் பட்டனர். அவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் தலைவர் சோனியா வின் உத்தரவுப்படி புதிதாக 13 அமைச்சர்கள் நியமிக்கப்பட் டனர்.
முதல்வர் சித்தராமையா மற்றும் கட்சி மேலிடத்தின் இந்த முடிவை கண்டித்து, பதவி நீக்கப்பட்ட 14 அமைச்சர்களின் ஆதரவாளர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.
பெங்களூருவில் முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட்டு ஆயிரக்கணக் கானோர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீ ஸார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதே போல் மைசூரு, மண்டியா, பெலகாவி உட்பட கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களின் ஆதரவாளர்கள் சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டத்தில் குதித்தனர். ஒரு சில இடங்களில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. குல்பர்காவில் ஒரு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
இதற்கிடையில் அமைச்சர்கள் நீக்கப்பட்டதால் கட்சிக்குள் எந்தப் பிளவும் ஏற்படவில்லை என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அம்பரீஷ் ராஜினாமா
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர், ‘‘எந்த காரணமும் கூறாமல் என்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். என்னை மதிக்காத ஆட்சியில் நீடிக்க விரும்பவில்லை’’ என்றார்.
இதே போல் புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், ஆர்.வி.தேவராஜ், எம்.கிருஷ்ணப்பா, பிரியா கிருஷ்ணா, முனிரத்னா உள்ளிட்ட 8 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக பெங்களூருவில் அவர்கள் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.