காவல் பணி காலியிடங்கள் விவரத்தை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவல் பணி காலியிடங்கள் விவரத்தை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

காவல் துறையின் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் பற்றிய விவரம் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு மாநில உள்துறை செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனைத்து மாநிலங்களிலும் காவல் துறையின் பல்வேறு நிலைகளில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர் கெடுகிறது. நாடு முழுவதிலும் 5.42 லட்சம் காவல் பணியிடங்கள் காலியாக உள்ளன என மனுதாரர் ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, "காவல் துறையில் பணியிடங்கள் காலியாக இருப்பது முக்கிய பிரச்சினையாகும். இதுபற்றி 4 வாரங்களுக்குள் மாநில அரசுகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஏதோ காரணத்தால் இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாத மாநிலங்கள் சம்பந்தப்பட்ட உள்துறை செயலர் நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர உரிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.

காவல் துறை பணியிட காலி விவகாரம் முக்கியமான பிரச்சினை என்பதால் அனைத்து மாநில அரசுகளின் உள்துறை செயலர்கள் காவல் துறை பணியிட காலி விவரம் அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பற்றி தகவலை உடனடியாக மாநில அரசுகளின் உள்துறை செயலர்களுக்கு ஒரு வார காலத்துக்குள் தெரிவிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in