Published : 27 Nov 2013 03:08 PM
Last Updated : 27 Nov 2013 03:08 PM

மோடிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவு: காரத் காட்டம்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்து வருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

காங்கிரஸைவிட பாஜகவே கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் நடந்துகொள்ளும் என்பதையே இது காட்டுவதாகவும் அவர் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் இன்று நடந்த கட்சிக் கூட்டத்தில் அவர் பேசும்போது, "நாட்டிலுள்ள அனைத்து பெரிய நிறுவனங்களிடம் இருந்தும் ஒட்டுமொத்தமாக நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுள்ள ஒரே தலைவர் நரேந்திர மோடிதான். காங்கிரஸை விட பாஜக மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும் என்பதற்கான குறியீடுகள்தான் இவை.

கடந்த ஓராண்டாக, நாடு தழுவிய அளவில் ஆங்காங்க வகுப்புக் கலவரமும் பதற்றமும் நிலவுவதைக் கவனித்திருக்கலாம். பாஜக மற்றும் மோடியின் தேர்தல் ஆதாயங்கள்தான் இதற்கான பின்னணியில் இருக்கின்றன" என்றார்.

மேலும், எதிர்வரும் 2014 தேர்தலில், பாஜகவின் மதவாதத்துக்கு எதிராகவும், காங்கிரஸின் ஊழலுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் செயல்பட வேண்டும் என்று பிரகாஷ் காரத் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x