Published : 01 Jun 2016 04:14 PM
Last Updated : 01 Jun 2016 04:14 PM
கேரளாவில் மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள சச்சின் டெண்டுல்கர் அனுமதி வழங்கியுள்ளார்.
கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப் (கேபிஎப்சி) உரிமையாளர்களான சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத் ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனை இன்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, “கேரளாவில் மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை வலுப்படுத்துவதற்கு கேரள அரசு தனது பெயரை பயன்படுத்திக் கொள்ள சச்சின் அனுமதி வழங்கியுள்ளார். இந்தப் பிரச்சாரத்தில் ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தப் பிரச்சாரத்தில் மாநிலத்தின் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படுவது உள்ளிட்ட பிற விஷயங்கள் குறித்து பின்னர் விவாதிக்கப்படும்.
கேரளாவில் திறமையான கால்பந்து வீரர்களை உருவாக்க தங்கும் வசதியுடன் கூடிய கால்பந்து அகாடெமி தொடங்க கேபிஎப்சி ஒப்புக்கொண்டுள்ளது” என்றார் பினராயி விஜயன்.
சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “கேரளாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச தரத்திலான கால்பந்து வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே கேபிஎப்சி-யின் முக்கிய நோக்கம். இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இதன் பணிகள் இருக்கும்” என்றார்.
கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் இசாக் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT