Last Updated : 27 Oct, 2014 02:34 PM

 

Published : 27 Oct 2014 02:34 PM
Last Updated : 27 Oct 2014 02:34 PM

ஆதார் அட்டை திட்டத்துக்கு மத்திய அரசு முழு ஆதரவு

ஆதார் அடையாள அட்டை தொடர்பான நிலைப்பாட்டில் திடீர் திருப்பமாக மத்திய அரசு அத்திட்டடத்தை செயல்படுத்துவது என முடிவெடுத்துள்ளது.

ஆதார் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், "ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஓர் அடையாள எண் வழங்கப்படுகிறது. இதனால், எங்கும் எப்போதும் ஒருவரின் அடையாளத்தை எளிதாக சரிபார்க்க முடியும்.

குறிப்பாக, நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மக்கள், அரசின் பல்வேறு சேவைகளைப் பெற வசதியாகவே இது இருக்கும்.பயோமெட்ரிக் அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்படுவதால், இந்த அடையாள அட்டையில் மோசடி செய்வதற்கு வாய்ப்பில்லை. ஆதார் அட்டை மூலம் மக்கள் பல்வேறு பயன்களைப் பெறலாம். வங்கியில் கணக்கு தொடங்க இந்த அட்டையை பயன்படுத்தலாம். அதோடு, பாஸ்போர்ட் பெறுவதற்கும் இதை அடையாள ஆவணமாக காட்டலாம். அரசின் பல்வேறு திட்டங்களை ஆதாருடன் இணைத்து செயல்படுத்தவுள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, முந்தைய உள்துறை அமைச்சர்கள் சுஷில் குமார் ஷிண்டே, ப.சிதம்பரம் ஆகியோரது நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. சுஷீல் குமார் ஷிண்டே, ப.சிதம்பரம் ஆகியோர் ஆதார் திட்டத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

குறிப்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 'பிரத்யேக அடையாள எண்ணின்' நம்பகத்தன்மை குறித்து சில சந்தேகங்களை கிளப்பியது. ஆதார் அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்வதற்கு பிரத்யேக அடையாள எண் அவசியம் இல்லை என தெரிவித்திருந்தது.

மேலும், பொதுமக்கள் வசிப்பிட சான்றுக்கும், அடையாளச் சான்றுக்கும் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் எவ்வளவுதூரம் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், தற்போதைய பாஜக தலைமையிலான ஆட்சியில் அத்திட்டத்தை முழுமையாக ஆதரித்திருப்பது கவனிக்கத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சகம், ஒரு தனிநபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் ஆதார் திட்டத்தைப் போல் எளிதான வழிமுறை வேறு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு ஆதார் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 67.38 கோடி பேருக்கு ஆதார் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு இதுவரை ரூ.4,906 கோடி செலவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x