பனாஜி நீதிமன்றத்தில் தருண் தேஜ்பால் முன் ஜாமீன் மனு

பனாஜி நீதிமன்றத்தில் தருண் தேஜ்பால் முன் ஜாமீன் மனு
Updated on
1 min read

பாலியல் புகாரில் சிக்கியுள்ள தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலை டெல்லி போலீசாரும் கோவா போலீசாரும் இணைந்து தேடி வருகின்றனர். ஆனால் அவர், பனாஜி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

வீட்டில் சோதனை:

தெற்கு டெல்லியில் உள்ள தருண் தேஜ்பால் வீட்டில் இன்று காலை 6 மணி தொடங்கி ஒன்றரை மணி நேரம் கோவா போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அவரது வீட்டில் சோதனை நடைபெற்ற போது தேஜ்பால் அங்கு இல்லை.

அவரது மனைவி கீதன் பத்ராவிடம் விசாரித்ததில், அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். இதனையடுத்து, கோவா போலீசாரும், டெல்லி போலீசாரும் இணைந்து தேஜ்பாலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரது உறவினர்கள் வீடுகளிலும் தேடுதல் நடத்தப்படுகிறது.

முன் ஜாமீன் மனு:

முன் ஜாமீன் கோரி பனாஜி செசன்ஸ் நீதிமன்றத்தில் தேஜ்பாலின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கிடையில், பிற்பகல் 2.30 மணி வரை அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து பனாஜி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்குள் கோவா போலீஸ் முன் ஆஜராகுமாறு தேஜ்பாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.ஆனால், கெடு முடிவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் தேஜ்பால் கோவா போலீசுக்கு அனுப்பிய ஃபேக்ஸில் போலீஸ் முன் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரியிருந்தார்.

ஆனால், அவரது இந்த கோரிக்கையை கோவா போலீசார் நிராகரித்தனர். பனாஜி முதலாவது நீதிமன்றம் நீதிபதி சரிகா ஃபல்தேசாய் தேஜ்பாலுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in