Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

திருப்பதி அருகே வனத்துறையினர் மீது தாக்குதல்

திருப்பதி அருகே திங்கள்கிழமை இரவு வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தும் கும்பல், வனத்துறை மற்றும் போலீஸார் மீது சரமாரியாக கற்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது.

அவர்கள் கடத்த முயன்ற ரூ.1கோடி மதிப்புள்ள செம்மரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் பாகராபேட்டை அடுத்துள்ள தேவரகொண்டாவில் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து இரு துறையினரும் கூட்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலையேற்ற பயிற்சி பெற்ற காவலர்களுடன் வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தேவரகொண்டா கொத்தபல்லி என்ற இடத்தில், மறைந்திருந்த செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகள் மீது திடீரென சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து அதிகாரிகளும் கடத்தல் கும்பல் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். இதனை எதிர்கொள்ள முடியாத கடத்தல்காரர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x