Published : 17 Oct 2014 08:53 AM
Last Updated : 17 Oct 2014 08:53 AM

சம்மன் வராததால் ஜெயலலிதாவின் வழக்கில் ஆஜராகமாட்டேன்: அரசு வழக்கறிஞர் பவானி சிங் பேட்டி

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன் றத்தில் இருந்து சம்மன் வராததால் விசாரணையின்போது ஆஜராகமாட்டேன், ஒருவேளை இறுதி நேரத்தில் தகவல் தெரிவித்தால் ஆஜராகி வாதிட முயற்சிப்பேன் என அரசு வழக்கறிஞர் பவானி சிங் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் 4 பேரும் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த‌ மனுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா முன்னிலையில் கடந்த 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்போது ஆஜரான பவானி சிங், ‘தனது பதவி காலத்தை நீட்டித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு முறைப்படி வழங்கப்படவில்லை.

அதனால் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான வழக்கில் ஆஜராக மாட்டேன்''என்றார். இதனால் 4 பேரின் மனுக்கள் மீதான விசாரணை தாமதமானது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் அனைத்து மேல்முறையீட்டுக்கும் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து அரசாணை வெளியிட்டது.

எனவே அவர் கடந்த 7-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி, ‘ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க தனக்கு ஆட்சேபம் இல்லை'என தெரிவித்தார். இதற்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா கண்டனம் தெரி வித்தது குறிப்பிடத்தக்கது.

பவானிசிங் ஆஜராகவில்லை

இந்நிலையில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதுகுறித்து அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம், ‘தி இந்து' சார்பாக பேசினோம். அவர் கூறிய தாவது:

“ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் என்னை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமித்தது. எனவே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டேன்.

தற்போது எதிர் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருவதாகவும் செய்திகளில் பார்த்தேன்.

ஆனால் இது தொடர்பாக வியாழக்கிழமை மாலை 6.30 மணி வரை உச்ச நீதிமன்றத்தில் இருந்து இவ்வழக்கில் ஆஜராகும் படி எவ்வித சம்மனும் வரவில்லை. அதனால் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டேன். ஒருவேளை கடைசி நேரத்தில் என்னை ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப் பட்டால் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடுவேன். அப்போது ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மீதான எனது கருத்தை தெரிவிப்பேன்.

இதே வேளையில் நான் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என சிலர் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கேள்விப் பட்டேன். அது தொடர்பாகவும் எனக்கு அதிகாரபூர்வமான தகவல் வரவில்லை.

உச்ச நீதிமன்றமும் கர்நாடக அரசும் எனக்கு ஒதுக்கிய பணியை செய்து கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு எனது மனசாட்சியுடன் கடமையை ஆற்றி வருகிறேன்'' என்றார்.

திமுக தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கம்

உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவிற்கும்,அரசு வழக்கறிஞராக பவானி சிங் தொடர்வதற்கும் சொத்துக்குவிப்பு வழக்கின் மூன்றாம் தரப்பான திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஆட்சேபிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக க.அன்பழகனின் வழக்கறிஞர்களிடம் கேட்டபோது,''எங்களுடைய பணி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை பெற்று தந்ததுடன் முடிந்துவிட்டது. மேல் முறையீட்டு மனுக்களில் வாதிடுமாறு திமுக தலைமை எங்களுக்கு உத்தரவிடவில்லை. எனவே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது நாங்கள் ஆஜராகவில்லை. அதேபோல அரசு வழக்கறிஞர் பவானி சிங், எதிர் தரப்புக்கு சாதகமாக வாதிட்டபோதும் ஆட்சேபிக்கவில்லை. ஒருவேளை திமுக தலைமை உத்தரவிட்டால் வரும் காலங்களில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையில் ஆஜராகி வாதிடுவோம்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x