

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுப்பது தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்கப்படலாம் எனக் கருதப் படுகிறது.
சபரிமலையில் 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்ப தில்லை. இது, அடிப்படை உரிமை மீறல் எனக் கூறி, பெண்களை சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இவ்வழக்கு நீதிபதி தீபக் மி்ஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய மூன்று நபர் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கலாம் எனக் கருதுகிறோம். கோயில் என்பது பொது சமயத் தளம். அங்கு பெண்கள் நுழைவதை நீங்கள் தடுக்கக் கூடாது. அது, பெண்களுக்கான உரிமையை மீறுவதாகும். ஒவ்வொரு உரிமையும் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். அதேசமயம் ஒவ்வொரு சமநிலைக்கும் வரம்புகள் உண்டு. உரிமைகளை சமப்படுத்துவது பிரச்சினைகளை உருவாக்குகிறது. நாங்கள் வெறுமனே இதனை அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க விரும்பவில்லை. இதனை அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டுமெனில் நாங்கள் விரிவான உத்தரவிட வேண்டும்” எனக் கூறி வரும் நவம்பர் 7-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். -