ஜெகனை மருத்துவமனையில் சேர்த்தது ஆந்திர போலீஸ்

ஜெகனை மருத்துவமனையில் சேர்த்தது ஆந்திர போலீஸ்
Updated on
1 min read

தெலங்கானாவுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை ஆந்திர போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஜெகன்மோகனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்ததையடுத்து, போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற ஜெகன்மோகனின் இல்லத்துக்கு புதன்கிழமை இரவு 11 மணியளவில் விரைந்து வந்த போலீஸார், அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றனர். அப்போது, ஜெகனின் ஆதரவாளர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த நடவடிக்கை குறித்து டி.சி.பி. சத்தியநாராயணன் கூறும்போது, "நாங்கள் அவரைத் தூக்கிச் சென்று நிஜாம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார். கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்ததால், ஜெகனுக்கு சர்க்கரை அளவு குறைந்துவிட்டது என்றும், அவர் உடனடியாக தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஜெகன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, கட்சியை மீண்டும் வழிநடத்த வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் மூத்த தலைவர் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in