திருப்பதி பிரம்மோற்சவம் 5-ம் நாள்: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா

திருப்பதி பிரம்மோற்சவம் 5-ம் நாள்: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா
Updated on
1 min read

திருப்பதி பிரம்மோற்சவ விழா வின் 5-ம் நாளான நேற்று மாலை கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. உற்சவரான மலையப்ப சுவாமி, கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள் மிக முக்கியமானதொரு நாளாகக் கருதப்படுகிறது. உற்சவரான மலையப்ப சுவாமி நேற்று காலை மோகினி அவதாரத்தில் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உடன் சிறிய கிருஷ்ணர் அவதாரத்திலும் சுவாமி பவனி வந்தார். இரு பல்லக்குகளில் மாட வீதிகளில் பவனி வந்த உற்சவ மூர்த்திகளை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவிந்தா..கோவிந்தா.. என கோஷமிட்டனர். சுவாமி வீதி உலா வந்த பாதையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

காலையில் மோகினி அவதாரத்தில் காட்சி அளித்த ஏழுமலையான், இரவில் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கருட சேவையை காண காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இதன் காரணமாக சர்வ தரிசனத்துக்கு 25 மணி நேரம் ஆனது. பாத யாத்திரையாக வந்த பக்தர்கள், திவ்ய தரிசனம் செய்வதற்கு 17 மணி நேரம் ஆனது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், நேற்று மதியம் திருமலையில் பக்தர்கள் சில நிமிடங்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பக்தர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தடுப்பு கம்பிகளை அகற்றி முன்னேறிச் சென்ற பக்தர்கள் நெரிசலில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்தனர்.

விபத்துகளை தடுக்க முன்னெச் சரிக்கையாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு பைக்குகளில் பயணம் செய்ய அனுமதிக் கப்படவில்லை.

திருமலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in