Last Updated : 07 Jul, 2015 12:15 PM

 

Published : 07 Jul 2015 12:15 PM
Last Updated : 07 Jul 2015 12:15 PM

வியாபம் ஊழலை சிபிஐ விசாரிக்க கோரும் மனு: ஜூலை 9-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

மத்தியப் பிரதேசத்தின் வியாபம் ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரும் திக்விஜய் சிங் உள்ளிட்டோரின் மனுக்களை ஏற்ற உச்ச நீதிமன்றம், இது தொடர்பான விசாரணை வரும் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

வியாபம் முறைகேடு வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், அம்பல ஆர்வலர்கள் (whistleblowers) ஆஷிஷ் சதுர்வேதி, டாக்டர் ஆனந்த் ராய் மற்றும் பிரசாந்த் பாண்டே ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதிகள் அருண் குமார் மிஸ்ரா மற்றும் அமிதவ ராய் ஆகியோரடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், "இம்மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. வியாபம் தொடர்புடைய இதர மனுக்களுடன் சேர்த்து வரும் 9-ம் தேதி விசாரிக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.

முன்னதாக, வியாபம் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவை நீக்கம் செய்வது குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்று இதே உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணையும் வரும் 9-ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வியாபம் முறைகேடும் மர்ம மரணங்களும்

மத்தியப் பிரதேசம் தொழில் முறை தேர்வு வாரியம் (எம்பிபிஇபி), மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர் தேர்வு வாரியமாகச் செயல்படுகிறது. மருத்துவத் துறை நியமனங்களுக்கான தேர்வுகளையும் இது நடத்துகிறது. 'வியாபம்' எனவும் அறியப்படும் இந்த வாரியத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டது.

வியாபம் முறைகேட்டில் தொடர்புடைய இளம்பெண் ஒருவர் ரயில்வே பாதை அருகே மர்மமான முறையில் கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்து கிடந்தார். அப்பெண்ணின் பெற்றோரிடம் 3 நாட்களுக்கு முன் பேட்டியெடுத்துக் கொண்டிருக்கும்போதே நிருபர் அக்ஷய் சிங் திடீரென வாயில் நுரைதள்ளி இறந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மறுநாளே மருத்துவக் கல்லூரி டீன் அருண் சர்மா இறந்தது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 'வியாபம்' ஊழல் தொடர்பாக இதுவரை 34 பேர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வியாபம் மர்ம மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி விலக வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

என்ன சொல்கிறார் ராஜ்நாத்?

முன்னதாக, வியாபம் விசாரணை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்தை முதல்வர் சிவராஜ் சவுகான் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பிறகு ராஜ்நாத் சிங் கூறும்போது, "சிறப்பு தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்த தனிப்படை மத்தியப் பிரதேச அரசின் கீழ் செயல்படவில்லை. உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் செயல்படுகிறது. இவ்விவகாரம் அரசியலாக்கப்படக்கூடாது.

உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ சிறப்பு தனிப்படை இந்த விசாரணையை உரிய முறையில் கையாளவில்லை எனக் கருதினால், சிபிஐ விசாரணை தொடங்கப்படும். சிபிஐ விசாரணை கோரும் மனு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டிலுமே நிராகரிக்கப்பட்டுள்ளது" என்று ராஜ்நாத் சிங் கூறியது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x