Last Updated : 08 Oct, 2014 11:29 AM

 

Published : 08 Oct 2014 11:29 AM
Last Updated : 08 Oct 2014 11:29 AM

எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்: 2 பெண்கள் பலி; 15 பேர் காயம்; இறப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு

ஜம்மு - காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஒரு வார காலத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 70 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஒரு வாரமாக இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த திங்கள்கிழமை பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்முவின் ஆர்னியா பகுதியில் 5 பேர் கொல்லப்பட்டனர். 34 பேர் காயமடைந்தனர். கடந்த 3-ம் தேதி குல்மார்க், ஜம்மு, பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார். 6 பேர் காயமடைந்தனர்.

மீண்டும் தாக்குதல்

சம்பா மாவட்டம், சில்லாரி கிராமப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேற்று காலை 7.30 மணியளவில் தாக்குதல் நடத்தினர். சிறிய ரக பீரங்கிக் குண்டுகள் வீசப்பட்டதில், அந்த கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா தேவியும், அவரது மருமகளும் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து அந்த கிராமத்தில் வசித்த 1,700 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

அதேபோன்று ஜம்மு மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் இருந்து 15 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துவிட்டனர். அவர்கள் தங்குவதற்காக தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. சம்பா, கதுவா மாவட்டங் களில் இருந்து 2 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துவிட்டனர்.

ஜோர்தா பண்ணைப் பகுதியில் காலை 9 மணியளவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். இந்த 6 பேரும் ஆர்.எஸ்.புராவில் ராணுவம் அமைத்துள்ள முகாமில் தங்கி இருந்தனர். நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் நேற்று மட்டும் 3 ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஜம்மு, சம்பா ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆர்னியா, ஆர்.எஸ்.புரா, கனசாக், பர்க்வால் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், 50-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ நிலைகள் சேதமடைந்துள்ளன. இது தவிர 35 கிராமங்களின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு தகுந்த பதிலடியை அளித்து வருகிறோம்.

மெந்தார் மற்றும் பூஞ்ச் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு, இந்தியா தகுந்த பதிலடியை அளித்தது. இதையடுத்து, அப்பகுதியில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தாக்குதலால் பாதிக்கப் பட்டுள்ள மாவட்டங்களின் உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஒமர் அப்துல்லா ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x