விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற ஜெகன் மோகனுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற ஜெகன் மோகனுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
Updated on
1 min read

ஆந்திராவில் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஆராவாரம் செய்த கட்சியினருக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருப்பதி - ஸ்ரீகாளஹஸ்தி நெடுஞ்சாலையில், முனகல பாளையம் கிராம மக்கள், மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து போராட்டக்காரர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் 13 பேர் முனகல பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதனால் அழுகை குரல், சவ ஊர்வலம் என கிராமமே சோகத்தில் மூழ்கியது.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆந்திர அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. நிதி உதவி வழங்க வந்திருந்த அமைச்சரும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான லோகேஷை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, சாலையை அகலப்படுத்தாததே இந்த விபத்துக்கு காரணம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் முனகல பாளையம் கிராமத்துக்கு வந்தார். அப்போது, ஜெகனுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், “கட்சி கூட்டத்துக்கு வந்தீர்களா? அல்லது வாக்குச் சேகரிக்க வந்தீர்களா? எதற்காக இந்த ஆரவாரம்? உங்கள் ஆறுதல் எங்களுக்கு தேவையில்லை” என மன வேதனையுடன் கூறினர். பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர், கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்டனர். அதன் பின்னரே அவர்களை கிராமத்துக்குள் அனுமதித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in