Published : 06 Oct 2014 02:32 PM
Last Updated : 06 Oct 2014 02:32 PM

பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்தியப் படைகள் முழுமையாக தயார்: அருண் ஜேட்லி

சர்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி என மாறிமாறி அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய ராணுவமும், துணை ராணுவப் படையும் எப்போதுமே முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஒரு வார கால தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அருண் ஜேட்லி இன்று (செவ்வாய்கிழமை) வீடு திரும்பினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: "பாகிஸ்தான் நடத்தும் ஒவ்வொரு அத்துமீறலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவமும், துணை ராணுவப் படையும் முழு ஆயத்த நிலையில் இருக்கிறது.

இதனை பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் தொடர் அத்துமீறல்களால் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நட்புறவை சீரமைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் பாகிஸ்தான் உணர வேண்டும்.

சர்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி என இரண்டு பகுதிகளிலும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். இரு நாடுகளுக்கு இடையே சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானிடமே இருக்கிறது" என்றார்.

கடந்த 4 நாட்களில் பாகிஸ்தான் 11 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 6 பேர் பலியாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் மட்டும் ஒரு சிறுமி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர், 29 பேர் படுகாயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x