Published : 17 Nov 2016 08:10 AM
Last Updated : 17 Nov 2016 08:10 AM
காலாவதியான 500, 1,000 ரூபாய் நோட்டுகளை 2017, மார்ச் 31-க்கு பிறகு வைத்திருப்பது சட்டவிரோத மாக கருதப்படும். இதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கறுப்புப் பணம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்ஹி, ‘‘பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம். இந்த கெடுவை தவறவிட்டவர்கள் 2017, மார்ச் 31-க்குள் உரிய விளக்கம் அளித்து மாற்றிக் கொள்ளலாம். அதன் பிறகும் பணத்தை மாற்றாமல் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
தற்போது எழுந்திருக்கும் சூழலை மத்திய அரசின் உயர்நிலை குழு மிகுந்த உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஒரு சிலர் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வெகுவிரைவில் மாற்றும் நோக்கில் முதல்வகுப்பு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருவதை கண்டுபிடித்துள்ளோம். மேலும் பலர் வேறு வகையில் கறுப்புப் பணத்தை மாற்றவும் முயற்சித்து வருகின்றனர்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள் ‘ஏடிஎம்கள் மற்றும் வங்கிக் கிளைகளில் புதிய ரூபாய் நோட்டுகள் விரைவாக கிடைக்கும் வகையில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறதா?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அட்டர்னி ஜெனரல் பாதுகாப்பு காரணத்தால் இந்தத் தகவலை வெளியிட முடியாது என மறுத்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT