Published : 11 Apr 2017 03:54 PM
Last Updated : 11 Apr 2017 03:54 PM

தமிழக விவசாயிகளின் 29-வது நாள் போராட்டம்: மண் சோறு சாப்பிட்டு பிரேமலதா நேரில் ஆதரவு

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு தேமுதிக மகளிர் அணித் தலைவர் பிரேமல்தா விஜயகாந்த் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். தமிழக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது. அதனால் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் இன்று, 29-ம் நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து விவசாயிகளுக்கு ஆதரவாக மண் சோறு சாப்பிட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

''விவசாயிகள் 29 நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இதை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதே முக்கிய கோரிக்கை. விவசாய பிரச்சினைகளைத் தீர்க்க நதிகளை இணைக்க வேண்டும். அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும்.

ஆட்சியில் இருந்தவர்களின் நிர்வாக சீர்கேடுகளால்தான் டெல்டா பகுதி வறட்சி அடைந்துள்ளது. இன்னும் இது தொடரக் கூடாது. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை தமிழக முதல்வர் சந்திக்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தில் மாநில பாஜக அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருக்கிறது. அதே போல தமிழக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது. அதனால் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

விவசாயிகளை கண்டுகொள்ளாவிட்டால், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு அழிவது உறுதி. இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு இதுபோன்ற இன்னல் வரக் கூடாது. விவசாயிகள் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும். அவர்களை தமிழகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் பிரதமரிடம் வலியுறுத்துவோம்'' என்றார்.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x