

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்வராக செவ்வாயன்று பதவியேற்றார்.
முன்னதாக இன்று மனோகர் பாரிக்கர் முதல்வராவதை அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி செய்திருந்த மனுவை உச்ச நீதீமன்றம் நிராகரித்தது.
அதாவது, காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில் கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா பாஜக-வின் மனோகர் பாரிக்கரை ஆட்சி அமைக்க அழைத்தது அதிகார துஷ்பிரயோகம் என்று உச்ச நீதிமன்றத்தை நாடியது காங்கிரஸ்.
ஆனால், இந்தப் பிரச்சினையை தீர்க்க நம்பிக்கை வாக்கெடுப்பே சிறந்தது என்று முடிவெடுத்த உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் மனுவை தள்ளுபடி செய்து மனோகர் பாரிக்கர் முதல்வராக அனுமதி அளித்து மார்ச் 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முந்தைய நடைமுறைகளை 15-ம் தேதி இறுதி செய்யவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில் மனோகர் பாரிக்கர் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.