கேஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

கேஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு கோரும் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரும் மனுவை, அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

டெல்லி முதல்வருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்ற மத்திய அரசின் விளக்கத்தைத் தொடர்ந்து, அரவிந்த் கேஜ்ரிவால் தமக்கான பாதுகாப்பை ஏற்க உத்தரவிடக் கோரும் வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மத்திய அரசு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று மனுதாரர் வழக்கறிஞர் அனூப் அஸ்வதி கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நடந்தது.

அப்போது வழக்கறிஞர் அனூப் அஸ்வதி வாதிடும்போது, "முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி (சாமானியர்) அல்ல; அவர் காஸ் ஆத்மி (முக்கியப் பிரமுகர்). மாநிலம் முழுவதையும் நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு. எனவே, அவர் தனக்கான பாதுகாப்பை ஏற்றுக்கோள்ள வேண்டியது அவசியம்" என்றார்.

அந்த வாதத்தைக் கேட்ட நீதிமன்றம், "நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அக்கறை? நீங்கள் பாதுகாப்பு வழக்கக் கோரும் நபரே தம் பாதுகாப்பு குறித்து கவலைப்படவில்லை. அதுவும் அவர் ஒரு மாநில முதல்வர். தமது பாதுகாப்பு குறித்த விஷயங்கள் அவருக்குத் தெரியும்" என்றது.

அதற்கு, "நான் இந்த மாநிலத்தின் குடிமகன். மாநில நலனில் உள்ள அக்கறை காரணமாகவே அவருக்குப் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று மனுதாரர் வாதிட்டார்.

இதனிடையே, டெல்லி முதல்வருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், டெல்லி முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in