Published : 10 Jun 2017 03:30 PM
Last Updated : 10 Jun 2017 03:30 PM
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உண்ணாவிரதம் இருப்பது ஓர் நாடகம் என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கூறும்போது, ”மத்தியப் பிரதேச முதல்வர் அவரது உண்ணாவிரத போராட்டம் ஒரு நாடகம் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் .அவர் காந்திய வழியில் உண்ணாவிரத போராட்டம் இருப்பதாக கூற முயற்சிக்கிறார். உண்மையில் அவர் இருப்பது காந்திய வழி அல்ல.
காந்திய வழி என்றால் அவர் காந்தி சிலைக்கு முன்புதானே உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லையே, தசரா மைதானத்தில் ராவணன் ஒவ்வொரு வருடமும் கொல்லப்படுவதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.
வேளாண் விளைபொருட்களை மாநில அரசு நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய பிரதேச விவசாயிகள் கடந்த 1-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 6-ம் தேதி மான்ட்சர் பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தலைநகர் போபால், இந்தூர் உட்பட மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதனை கட்டுப்படுத்தவும், மத்திய பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தவும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று காலை 11மணி முதல் தசரா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT