Published : 29 Oct 2013 01:12 PM
Last Updated : 29 Oct 2013 01:12 PM

கேரள முதல்வர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

கண்ணூரில் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி இன்று வீடு திரும்பினார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கேரள காவல் துறையின் சார்பில் தடகளப் போட்டியின் நிறைவு விழா கண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சென்ற முதல்வர் உம்மன் சாண்டி கார் மீது இடதுசாரி முன்னணியினர் கல் வீசினர். இதனால், சாண்டிவின் தலை மற்றும் காலில் லேசாக காயம் ஏற்பட்டது. திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை வீடு திரும்பினார்.

மூன்று நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்து உள்ளனர். இதனால், இன்று கலந்துகொள்ளவதாக இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார், உம்மன் சாண்டி.

சோலார் பேனல் ஊழலுக்கு எதிரான போராட்டம்

சோலார் பேனல் ஊழல் தொடர்பாக உம்மன் சாண்டியைக் கண்டித்து இடதுசாரி முன்னணியினர் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. அதே விவகாரத்தில் சாண்டிக்கு எதிராக போராடிவந்த போதிலும், மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சு தானந்தன் திங்கட்கிழமை திருவனந்தபுரம் மருத்துவமனையில் அவரை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது கார் மீது கல் வீசி தாக்கியதை அச்சுதானந்தன் வன்மையாகக் கண்டித்துள்ளார். சாண்டி மீது தாக்குதல் நடத்துவது போராட்டத்தில் ஈடுபடும் இடதுசாரி முன்னணியினர் நோக்கம் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

17 பேர் கைது

உம்மன் சாண்டி மீது தாக்கு தல் நடத்தியவர்களை தேடி வந்த போலீஸார், இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த 22 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றி வளைத்தனர். அவர்களில் 17 பேரை கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி (ஐபிசி 307) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் சில எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கே.கே. நாராயணன் மற்றும் சி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x