

முசாபர்நகர் கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை தரப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர் நகர் பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் இன்று நேரில் பார்வையிட்டார். முகாமில் தங்கியுள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், “கலவரங்களுக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாண உதவிகளை அளிப்பதிலும், முகாமில் தங்கியுள்ளவர்களை மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வழிவகுக்கப்படும்” என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
பிரதமர் மன்மோகன் சிங்குடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினர்.
முன்னதாக, முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த 7 ஆம் தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது. இதில் 47 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
வன்முறை பாதிப்புக்கு உள்ளான முசாபர்நகர் மாவட்டத்துக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டார். அவரை கண்டித்து கிராம மக்கள் முழக்கம் எழுப்பியதுடன் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். வன்முறையை அடக்க முதல்வர் அகிலேஷ் யாதவ் தவறியதாக எதிர்க்கட்சிகளும் சிறுபான்மை இனத் தலைவர்களும் குறை கூறியது குறிப்பிடத்தக்கது.