Published : 24 Feb 2017 10:30 AM
Last Updated : 24 Feb 2017 10:30 AM

டெல்லியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்-ல் போலி 2,000 ரூபாய் நோட்டு மத்திய அரசு விசாரணை: நிதித்துறை இணையமைச்சர் தகவல்

வங்கி ஏடிஎம் மையத்தில் போலி 2,000 ரூபாய் நோட்டு வந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார்.

டெல்லி சங்கம் விஹாரில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் கால் சென்டர் ஊழியர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணம் எடுத்தபோது போலி 2000 ரூபாய் நோட்டுகள் வந்தன. இதுதொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டேட் வங்கி நிர்வாகம் தனி விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து மத்திய நிதித்துறை இணை யமைச்சர் சந்தோஷ் கங்க்வார் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, கள்ள நோட்டு புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லி ஏடிஎம் சம்பவம் கவலையளிக்கிறது. இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

வங்கதேசத்தில் இருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் போலவே போலி நோட்டுகளை இந்தியாவுக்குள் கடத்தியது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x