Last Updated : 27 Nov, 2013 09:11 AM

 

Published : 27 Nov 2013 09:11 AM
Last Updated : 27 Nov 2013 09:11 AM

குழாய்வழி எரிவாயு திட்டம்: தமிழக அரசின் ஆதரவை நாட கெயில் திட்டம்

கேரளத்திலிருந்து தமிழகம் வழியாக கர்நாடகத்துக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் சர்ச்சைக்குரிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசின் ஆதரவை நாட கெயில் (இந்தியா) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கொச்சியிலிருந்து குட்டநாடு, மங்களூர் வழியாக பெங்களூருக்கு தரையில் குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதுகுறித்து கெயில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.சி. திரிபாதி கூறுகையில், “தமிழக அரசின் ஆதரவுடனும் கூட்டு முயற்சியுடனும் குழாய் வழி எரிவாயு திட்டம் விரைவில் தொடங்கும் என நம்புகிறேன். அதேநேரம், விவசாயிகள், தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்” என்றார்.

குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் இந்தத் திட்டத்துக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுவிஷயத்தில் தமிழக அரசு ஆதரவளிக்காததால் கெயில் நிறுவனம் உயர் நீதி மன்றத்தை அணுகியது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும் என அப்பகுதி விவசாயிகள் தவறான அச்சம் கொண்டுள்ளனர் என கெயில் தெரிவித்துள்ளது. இது தவிர, அவர்கள் கூறுவது போல நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிப்பது பாதுகாப்பானதாக இருக்காது என்றும் கெயில் தெரிவித்துள்ளது.

கொச்சியிலிருந்து பெங்களூருக்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் பதிப்பதற்கு கெயில் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.

ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 884 கி.மீ. தூரத்துக்கு குழாய் பதிக்கப்படும். இதில் 310 கி.மீ. தூரம் தமிழகத்தில் வருகிறது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது தமிழக அரசு ஆதரவு அளித்தது. இதனால் 60 கி.மீ. முதல் 70 கி.மீ. தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. எனினும், பின்னாளில் இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளும் ஆதரவளித்ததால் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்தத் திட்டம், மார்ச் 2013-ல் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதன் மூலம், கேரளம், தமிழகம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் போக்குவரத்து, தொழிற்சாலை மற்றும் வீடுகளுக்குத் தேவையான எரிவாயு சப்ளை செய்யப்படும்.

இந்த வழித்தடத்தில் கொண்டு செல்லப்படும் மொத்த எரிவாயுவில் சுமார் 60 சதவீதம் தமிழகத்தில் சப்ளை செய்யப்படும் என கெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x