Last Updated : 26 Oct, 2014 11:52 AM

 

Published : 26 Oct 2014 11:52 AM
Last Updated : 26 Oct 2014 11:52 AM

காஷ்மீர் அமைச்சர் ஷாம் லால் சர்மா ராஜினாமா

ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர் ஷாம் லால் சர்மா ராஜினாமா செய்து விட்டார்.

காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. மாநில சுகாதாரத் துறை, வெள்ளத் தடுப்புத் துறை அமைச்சராக காங்கிரஸைச் சேர்ந்த ஷாம் லால் சர்மா உள்ளார். அந்த மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஷாம் லால் சர்மா அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸை சந்தித்த ஷாம் லால் சர்மா, தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பின்னர் பிடிஐ செய்தியாளரிடம் ஷாம் லால் சர்மா கூறியதாவது: “முதல்வர் ஒமர் அப்துல்லா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதால், காங்கிரஸ் மாநிலத் தலைவரிடம் எனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளேன்.

தினக்கூலி தொழிலாளர்களை பணி வரன்முறைப்படுத்த நிதி அமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவருமான அதுல் ரஹீம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1994-ம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இந்த தொழிலாளர்களின் நலனைக் கருதி கேபினட் அமைச்சரவை துணைக் குழு கடந்த 2009-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால், அக்குழு தொழிலாளர்களின் நலனுக்காக எந்த வொரு பணியையும் செய்யவில்லை.

நான் சார்ந்துள்ள ஜம்மு பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் தினக்கூலிகளாக பணிபுரிந்து வருகின்றனர். எனவே, ஜம்மு பகுதியை புறக்கணிக்கும் வகையில் காழ்ப்புணர்வுடன் அதுல் ரஹீம் செயல் படுகிறார். இதை கண்டித்து எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என்றார். ஆனால், இக்குற்றச்சாட்டை தேசிய மாநாட்டுக் கட்சி மறுத்துள்ளது. அக்கட்சியின் ஜம்மு பகுதி தலைவர் தேவேந்தர் சிங் ரானா செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனது அரசியல் நலனுக்காக ஷாம் லால் சர்மா ராஜினாமா செய்துள்ளார். அவர் காங்கிரஸிலிருந்து விலகி வேறொரு கட்சியில் சேர்வதற்காகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளார் எனக் கருதுகிறேன்” என்றார்.

ஆனால், இதை மறுத்துள்ள ஷாம் லால் சர்மா, தான் மாநில அரசிலிருந்துதான் தற்போது விலகியுள்ளதாகவும், தொடர்ந்து காங்கிரஸுக்காக பாடுபடப் போவதாகவும், தெரிவித்தார்.

இதனிடையே, மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பரூக் ரென்ஸு, தனது ராஜினாமா கடிதத்தை, கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x