Published : 24 Mar 2014 01:12 PM
Last Updated : 24 Mar 2014 01:12 PM

சிசிடிவி பதிவுகள் வெளியான விவகாரம்: தேஜ்பால் குடும்பத்தினர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்

தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் குடும்பத்தினர் தனது பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பாலியல் பலாத்கார சம்பவம் அடங்கிய சிசிடிவி பதிவுகளை வேண்டும் என்றே ட்விட்டரில் கசியவிட்டதாக கோவா குற்றவியல் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் நிருபர் புகார் அளித்துள்ளார்.

கோவா குற்றவியல் காவல்துறை அதிகாரியிடம் அவர் அளித்துள்ள புகாரில்,” கோவா மாநிலம் பனாஜியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தெஹல்கா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, ஹோட்டல் லிப்ட்டில், நடந்த அத்துமீறல் சம்பவம் பதிவான சிசிடிவி பதிவுகளை தேஜ்பால் குடும்பத்தினர் ட்விட்டரில் கசியவிட்டுள்ளனர். இந்த செயல் எனது தனியுரிமை மற்றும் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கு வகையில் செய்யப்பட்டுள்ளது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரினை மார்ச் 19- ம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் மின்னஞல் மூலம் அனுப்பியுள்ளதாக குற்றவியல் காவல்துறை அதிகாரி சுனிதா சாவந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில், கோவா மாநிலம் பனாஜியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தெஹல்கா சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஹோட்டல் லிப்ட்டில், தேஜ்பால் தன்னை பலாத்காரம் செய்ததாக அவருக்கு கீழ் பணியாற்றிய பெண் நிருபர் புகார் அளித்தார்.

தேஜ்பாலின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கோவா போலீஸாரால் கடந்த நவம்பர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது சதா கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x