Published : 09 Apr 2017 11:28 AM
Last Updated : 09 Apr 2017 11:28 AM
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களின் முன்னிலையில் 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
அதன்பின் இரு தலைவர்களும் மேடையில் இருந்து கீழே இறங்கி வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் தொடர்பான நூலை வெளியிட வேண்டும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இந்திய மூத்த அதிகாரி ஒருவர், இரு பிரதமர்களும் ‘கீழே இறங்குங்கள்’ (May I now request the two prime ministers to step down) என்று ஆங்கிலத்தில் மென்மையாகக் கூறினார். அந்த வார்த்தை சிலேடையாக அமைந்துவிட்டது.
இருவரும் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மற்றொரு அர்த்தமும் உள்ளதால் மோடியும் ஹசீனாவும் தங்களையறியாமல் மெய்மறந்து சிரித்தனர். இதனால் டெல்லி ஹைதராபாத் இல்லம் சிரிப்பலைகளால் நிறைந்தது.
முன்னதாக வங்கதேச விடுதலைப் போரின் போது உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் அஞ்சலி செலுத்தினர். மகாத்மா காந்தி நினைவிடத்திலும் ஹசீனா அஞ்சலி செலுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT