

மான் வேட்டை வழக்கிலிருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை விடுவித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சாட்சியங்கள் சரியாக நிரூபிக்கப்படாததால் சந்தேகத்தின் பலனை அளித்து சல்மான் கானை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இரண்டு மான்களை வேட்டையாடியதாக சல்மான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது காலாவதியான துப்பாக்கி உரிமம் வைத்திருந்ததாக ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 2006-ல் கீழ் நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் தரப்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மான் வேட்டை வழக்கிலிருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை விடுவித்தது.