Published : 16 May 2017 08:27 PM
Last Updated : 16 May 2017 08:27 PM
மத்தியில் ஆளும் பாஜக அரசு 3 ஆண்டுகளில் எதுவுமே சாதிக்கவில்லை. இதில் கொண்டாட்டம் எதற்கு என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. பாஜக ஆட்சியின் 3 ஆண்டுகள் நிறைவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வரும் 26-ம் தேதி அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று 3 ஆண்டு ஆட்சி நிறைவு கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து வரும் ஜூன் 15-ம் தேதி வரை பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். எல்லையில் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலின்போது பாஜக அளித்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு எதையுமே சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. இதில் கொண்டாட்டம் எதற்கு?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT