மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் ரத்தாகும் வரை வீட்டுக்கு சென்று தாயை சந்திக்க மாட்டேன்: இரோம் ஷர்மிளா சபதம்
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யக் கோரி கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர், 5-ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கிய இரோம் ஷர்மிளா தனது கோரிக்கை நிறைவேறும் வரை உணவு, தண்ணீர் அருந்த மாட்டேன் என தெரிவித்தார். அத் துடன் தனது வீட்டுக்குச் சென்று தாயையும் சந்திக்க மாட்டேன் என சபதம் எடுத்தார். இந்நிலையில் 16 ஆண்டுகள் உண்ணாவிரதத்தை நேற்று முன்தினம் முடித்துக் கொண்ட இரோம் ஷர்மிளா நகம் வெட்டவோ, சிகை அலங்காரம் செய்யவோ, தாயை சந்திக்கவோ போவதில்லை என்ற சபதத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் விடுதலையானதும் நேரடியாக வீட்டுக்குச் செல்லாமல் ஆசிரமத்தில் தங்க முடிவு எடுத்தார்.
இது குறித்து இரோம் ஷர்மிளாவின் சகோதரர் சிங்காஜித் கூறும் போது, ‘‘ஒருமுறை இரோம் ஷர்மிளாவை மருத்துவமனையில் சந்திக்க நேர்ந்தபோது, போராட்டத் தில் வெற்றி பெற்ற பிறகு தான் என்னை வந்து சந்திக்க வேண்டும் என தாயார் சஹி தேவி உறுதியாக கூறிவிட்டார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவே இரோம் ஷர்மிளா வீட்டுக்கு வரவில்லை’’ என்றார்.
இதையடுத்து நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு திரும்பாமல் தனது ஆதரவாளர்கள் வீட்டுக்கு இரோம் ஷர்மிளா சென்றார். ஆனால் திடீர் திருப்பமாக யாரும் அவருக்கு அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை.
கடைசியாக இம்பால் போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்கினார். உண்ணாவிரதத்தை கைவிடுவதற்கு ஆதர வாளர்கள் பலர் எதிர்ப்பு தெரி வித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’வுக்கு சமூக ஆர்வலரனா மலேம் நிங்தவுஜா கூறும்போது, ‘‘இந்திய தேர்தல் அரசியல் மீது மணிப்பூர் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அரசியலில் ஒருமுறை நுழைந்துவிட்டால், இரோம் ஷர்மிளாவும், பிற அரசியல்வாதி கள் போல மாறிவிடுவார் என அவர் கள் நினைக்கின்றனர்’’ என்றார்.
ஆரோக்கிய ரகசியம்
16 ஆண்டுகள் திட உணவு சாப் பிடாத போதிலும், அவரது ஆரோக் கியம் பாதிக்கப்படவில்லை. இதற்கு அவர் தினசரி யோகா பயிற்சி செய்து வந்ததே காரணம் என அவரது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் தெரிவிக் கின்றனர். இது குறித்து ஷர்மிளாவின் சகோதரர் இரோம் சிங்காஜித் கூறும்போது, ‘‘உண்ணாவிரதம் தொடங்குவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பாக, 1998-ல் ஷர்மிளா யோகா பயின்றார். அந்தப் பயிற்சியை தினசரி மேற்கொண்ட தாலும், மன உறுதியாலும் தான் அவர் தனது ஆரோக்கியத்தை பேணி காத்துக் கொண்டார். யோகா கால்பந்து விளையாட்டு போல அல்ல. அது வேறுவிதமானது. யோகா கற்று தினசரி பயற்சி செய்து வரும் நபரால் நீண்டநாள் வரை உயிருடன் வாழ முடியும்’’ என்றார்.
