முன்பதிவு செய்த இருக்கையில் வேறு ஒருவர் பயணம்: பயணிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு; ரயில்வே துறைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு

முன்பதிவு செய்த இருக்கையில் வேறு ஒருவர் பயணம்: பயணிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு; ரயில்வே துறைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

முன்பதிவு செய்த இருக்கையை வேறு ஒருவர் ஆக்கிரமித்து பயணம் செய்ததால் பாதிக் கப்பட்ட பயணிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு டெல்லி மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த விஜய் குமார் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் ஒரு புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து டெல்லிக்கு தக்சின் விரைவு ரயிலில் பயணம் செய்வதற்காக கீழ் படுக்கை இருக்கையை முன்பதிவு செய்தேன். ஆனால் மத்திய பிரதேச மாநிலம் பினா ரயில் நிலையத்தில் ஏறிய ஒருவர் எனது இருக்கையில் வந்து அமர்ந்திருந்தார்.

மேலும் முன்பதிவு செய்யாத சில பயணிகள் அந்தப் பெட்டிக்குள் ஏறி இன்னல் கொடுத்தனர். இதனால் நான் உட்பட முன்பதிவு செய்த பயணிகள் அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து புகார் செய்வதற்கு பயணச் சீட்டு பரிசோதகரை தேடினேன். ஆனால் அவரைக் காணவில்லை. எனக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இதை விசாரித்த மாவட்ட நுகர்வோர் மன்றம், சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் யாரும் ஆஜராகாததால், சேவைக் குறைபாடு காரணமாக பயணிக்கு ரூ.75 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. இந்தத் தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிடக் கோரி விஜய் குமார் டெல்லி மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.

அதிகாரி சம்பளத்தில்..

இதை விசாரித்த ஆணையத் தின் தலைவர் நீதிபதி வீனா பீர்பால், மாவட்ட நுகர்வோர் மன்ற உத்தரவுப்படி ரூ.75 ஆயிரத்தை பயணிக்கு வழங்க உத்தரவிட்டார். இந்தத் தொகை யில் 3-ல் ஒரு பங்கை கடமையை செய்யத் தவறிய அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டார். அதேநேரம், இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க ஆணையம் மறுத்து விட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in