இறையடியானுக்கு சாகித்ய அகாடமி விருது: 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்காக தேர்வு

இறையடியானுக்கு சாகித்ய அகாடமி விருது: 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்காக தேர்வு
Updated on
2 min read

கன்னடத்தில் வெளியான ‘அவதேஸ் வரி' நாவலை தமிழில் சிறப்பாக‌ மொழிபெயர்ப்பு செய்ததற்காக எழுத்தாளர் இறைடியானுக்கு, 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிப் பெயர்ப்பாளருக்கான‌ ‘சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கான பரிசளிப்பு விழா டெல்லியில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.

2012-ல் கன்னடத்தில் வெளியான ‘அவதேஸ்வரி' நாவல், 'பண்டைய காலத்தில் வடகர்நாடகாவில் உறவுகள் முறிய கூடாது என் பதற்காக அண்ணனுக்கும் தங்கைக்கும் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நடை முறையில் இருந்தது. இது குறித்து ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கிடைத்த‌ தடயங்களை வைத்து எழுத்தாளர் ‘ச‌ங்கர மொகாஷி புனேகர்' என்ப வரால் கன்னடத்தில் நாவல் எழுதப்பட்டது. வாசகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந் நாவலுக்கு 2012-ம் ஆண்டிற்கான‌ சிறந்த கன்னட நாவலாக 'சாகித்ய அகாடமி'விருது வழங்கப்பட்டது.

கன்னடத்தில் கவனத்தை ஈர்த்த ‘அவதேஸ்வரி' நாவலை, எழுத்தாளர் இறையடியான்(73) தமிழில் மொழிபெயர்த்தார்.தமிழில் வெளியான ‘அவதேஸ் வரி', தீவிர‌ இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக‌ பேசப்பட்டது.

இந்நிலையில் 2013-ஆம் ஆண்டில் வெளிவந்த‌ சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல்களுக்கான விருதுகளை சமீபத்தில் அறி வித்தது. ‘அவதேஸ்வரி' நாவலை சிறப்பாக‌ தமிழில் மொழிப்பெயர்த்த எழுத்தாளர் இறையடியானுக்கு, ‘2013-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருப் பதாக அறிவிக்கப்பட்டது.ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் அவருக்கு பரிசு கேடயமும், பரிசு தொகையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

பெங்களூரை சேர்ந்த‌ எழுத் தாளர் இறையடியானை அவரது இல்லமான ‘தாயக‌த்தில்' சந்தித்து, ‘தி இந்து'சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தோம். அவரிடம் பேசிய தில் இருந்து...

இந்த விருதை யாருக்கு சமர்ப்பணம் செய்வீர்கள்?

கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட எனக்கு 'தமிழ்' என்கிற அற்புதமான மொழியை போதித் தவர்களுக்கும், தமிழுக்கும், தமிழர் களுக்கும் சமர்ப்பிக்கிறேன். என்னுடைய நண்பர்களுக்கும், மொழிப்பெயர்ப்பில் உதவியாக இருக்கும் கன்னட தோழர்களுக்கும் சேர்த்து சமர்ப்பிக்கிறேன்''.

உங்களுடைய தாய்மொழி கன்னடமா..? உங்களைப் பற்றி சிறுகுறிப்பு?

‘என்னுடைய பூர்வீகம் கர்நாடக மாநிலம் தும்கூர் அருகில் இருக்கும் மதுகிரி தான். கிட்டதட்ட 80 ஆண்டுகளுக்கு முன்னர் எனது பெற்றோர் பிழைப்பு தேடி பெங்களூருக்கு வந்துவிட்டனர். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூர் தான்.எங்களை சுற்றி எல்லா திசையிலும் தமிழர்கள்தான் இருந்தனர். என்னுடைய பெற் றோர் எனக்கு கன்னடர்களின் உணவான ‘களி'யை உணவாக அளிக்காமல் சோறூட்டி தமிழனாக வளர்த்தனர். பள்ளியில் தமிழை முதல் பாடமாகவும், கன்னடத்தை விருப்பப் பாடமாகவும் படித்தேன். என்னுடைய அப்பா ரிக் ஷா ஓட்டி கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். நான் சுமாராக படித்ததால் மத்திய அரசின் ‘இந்திய தொலைபேசி தொழிற்சாலை'யில் வேலை கிடைத்தது.

கடந்த 20 ஆண்டுகளில் 21 நூல்களை கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்திருக்கிறேன். நேரடியாக 7 நூல்களை தமிழில் எழுதி இருக்கிறேன். தமிழின் மீது ஏற்பட்ட தீராத காதலின் காரணமாக ‘தாஸ்'என்கிற பெயரை ‘இறையடியான்' என மாற்றிக் கொண்டேன்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in