

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் நவ்காம் செக்டாரில் இரண்டு தீவிரவாத ஊடுருவலை ராணுவம் முறியடித்தது.
இது குறித்து ராணுவச் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “யூரி, நவ்காம் பகுதிகளில் ஊடுருவல் முறியடிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நவ்காம் பகுதியில் இரு வேறு ஊடுருவல் முயற்சிகளை ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டருகே பாகிஸ்தான் தூண்டுதலினால் ஊடுருவல் முயற்சிகள் தொடர்ந்து வரும் வேளையில் நேற்று இரவு இரண்டு வேறு வேறு தீவிரவாத ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது, ராணுவம் தனது கண்காணிப்பை மேலும் விரிவாக்கி, தீவிரப்படுத்தியுள்ளது. இரண்டு வேறு குழுக்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ மேற்கொண்ட முயற்சியை ராணுவம் முறியடித்தது” என்றார்.
பந்திப்போரா பகுதியில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பந்திப்போராவின் அராகம் கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் குழாமிட்டுள்ளதாக தகவல்கள் வந்ததையடுத்து அப்பகுதியை சிஆர்பிஎப் படையினர், ராணுவம் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களை நோக்கி முன்னேறிய போது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், குப்வாரா நவ்காம் பிரிவு மற்றும் பாரமுல்லாவின் லச்சிபோரா பகுதியில் 2 தீவிரவாதக் குழுக்களின் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.