Published : 03 Feb 2017 09:39 AM
Last Updated : 03 Feb 2017 09:39 AM
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் 60 நாடுகளைச் சேர்ந்த 240 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
கர்நாடக அரசு மற்றும் திரைப்பட அகாடமி சார்பில் நடத்தப்படும் 9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கவிழா கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. வங்காள இயக்குநர் புத்ததேவ் தாஸ்குப்தா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். எகிப்து நாட்டைச் சேர்ந்த இயக்குநர் ஹலா காலில், நடிகை சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
9-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் ஆசியா, இந்தியா, கன்னடம், கன்னட பொழுதுபோக்கு என 4 பிரிவுகளில் 60 நாடுகளைச் சேர்ந்த 240 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் 25 திரைப்படங்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெண் இயக்குநர்களால் இயக்கப்பட்டவை என்பது சிறப்பு அம்சமாகும்.
பல்வேறு மொழிகளைச் சேர்ந்த கவனம் ஈர்த்த திரைப்படங்கள் பெங்களூருவில் 11 திரைகளிலும், மைசூருவில் 4 திரைகளிலும் திரையிடப்படுகின்றன. கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்கள் அதிகமாக திரையிடப்படும் இவ்விழாவில் தமிழில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ மட்டுமே திரையிடப்படுகிறது.
இயக்குநர் விஜய் ஜெயபால் தமிழிலும், ஆங்கிலத்திலும் இயக்கிய ‘ரிவிலேஷன்’ திரைப் படம் ஆங்கிலத்தில் திரையிடப் படுகிறது. தன் வரலாற்றுப்படப் பிரிவில் கவிஞர் பாப்லோ நெருடா, எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் பற்றிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
மேலும், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாடகர் பாலமுரளி கிருஷ்ணா, நடிகர் ஓம் புரி உள்ளிட்ட திரை ஆளுமைகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் புரட்சியாளர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் சிறப்பு திரைப்படங்களும் இடம் பெறுகின்றன. இதுமட்டுமில்லாமல் திரைப்பட தொழில்நுட்பம் குறித்து நடைபெறும் சிறப்பு கருத்தரங்குகளில் இயக்குநர் வெற்றி மாறன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
வரும் 9-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் நிறைவு விழா மைசூரு அரண்மனையில் கோலாகலமாக நடைபெறுகிறது. வெற்றிபெறும் திரைப்படங்களுக்கு இவ்விழாவில் ரொக்கப் பரிசும், விருதும் வழங்கப்படுகிறது.
9-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் ஆசியா, இந்தியா, கன்னடம், கன்னட பொழுதுபோக்கு என 4 பிரிவுகளில் 60 நாடுகளைச் சேர்ந்த 240 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT